42-வது புத்தகக் கண்காட்சி திருவிழா 2019 ஜனவரி 4-ந் தேதி துவக்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி !
42-வது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதன் முறையாக 17 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த புத்தகக் கண்காட்சிக்காக, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 820 அரங்குகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதில் 487 அரங்குகள் தமிழ் அரங்குகள் என கூறப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சென்னை புத்தகக் கண்காட்சியை பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்திவருகிறது.
சுமார் 12 லட்சம் தலைப்பில், ஒன்றரை கோடி புத்தங்கள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. இந்த புத்தகக் கண்காட்சியை வரும் ஜனவரி 4-ஆம் தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளதாக பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களுக்கு இலவச அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினர். மேலும் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவாக கலையரங்கம் ஒன்று நிறுவப்பட உள்ளதாகவும் பபாசி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மக்களின் வாசிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கவும், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புத்தகக் காட்சிகளின் போது தினமும் மாலை நேரத்தில் புகழ் பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது வாழ்விற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகையாளர்களை வரவழைத்து வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது.