நைஜீரியாவில் அதிபர் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் – 14 பேர் பலி , பலர் படுகாயம்.
நைஜீரியா நாட்டின் அதிபர் முகமது புஹாரி தலைமையில் நடைபெற்ற பிரசார பேரணியில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நைஜீரியா நாட்டின் அதிபராக பதவி வகித்து வரும் முகமது புஹாரியின் 4 வருட பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அதனால் அந்நாட்டில் வரும் சனிக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் புஹாரி மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் முக்கிய போட்டியாளராக நைஜீரியாவின் முன்னாள் துணை அதிபர் அட்டிக்கு அபூபக்கர் களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு முகமது புஹாரி தலைமையில் பிரசார பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்த பிரசார பேரணியானது போர்ட் ஹார்க்கோர்ட் நகரின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் அதோக்கியே அமியெசிமகா என்ற மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் புஹாரி பிரசாரத்தில் ஈடுபட்டார். புஹாரி பேச்சை தொடர்ந்த போது பொதுமக்கள் அவரை பார்ப்பதற்காக பாதியளவில் திறக்கப்பட்ட கதவு வழியாக முண்டியடித்துக்கொண்டு சென்றனர் அதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இவ்வாறு ஏற்பட்ட இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசல் விபத்து பற்றி அறிந்த அதிபர் மிகவும் வேதனை அடைந்திருப்பதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.