ஊரடங்கு தளர்வுகள் அமல்..! 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் திறப்பு..!
Curfew relaxed on tamilnadu few places
சென்னை: கிட்டத்தட்ட 40 நாட்கள் கழித்து ஓட்டல்கள், கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அதிகாரிகள் வலியுறுத்தி இருக்கின்றனர்.
கொரோனாவால் உலகின் இயக்கம் இப்போது வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றால் இந்தியாவில் 3ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை அமலில் இருக்கும்.
ஊரடங்கு நீட்டிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் கொரோனா பாதித்த பகுதிகளை தவிர பிற பகுதிகளில் கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணி முதல் அந்த தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி, கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. ஓட்டல்கள், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். ஆனால் வாடிக்கையாளர்கள் பார்சல் பெற்றுக்கொள்ள மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது.
நகராட்சி, மாநகராட்சி வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி கிடையாது. ஆனால் தனியாக செயல்படும் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். மற்ற கடைகளுக்கும் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளியை தவறாது பின்பற்ற வேண்டும். எந்த இடத்திலும் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது, கட்டாயம் மாஸ்க் அணிந்து தான் வெளியில் வரவேண்டும் என்று அறிவுறுத்தல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.