கஜா புயல் நிவாரண நிதி மத்திய அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் டெல்டா பகுதியில் ஏற்பட்ட கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு 1,146.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கஜா புயலால் தமிழகத்தின் 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்திருப்பதாக பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். மேலும் புயல் பாதிப்புகளை சீா் செய்வதற்காக தமிழகத்திற்கு ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும், முன்னதாக இடைக்கால நிவாரண நிதியாக ரூ.1,500 கோடியை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசு சாா்பில் குழு அமைக்கப்பட்டு கஜா புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
முதல் கட்டமாக 353 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியிருந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, விவசாயத்துறை அமைச்சர் ராஜா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் கஜா புயல் நிவாரண நிதியாக 1,146.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கோரியது. அதிலும் முதற்கட்ட இடைக்கால நிவாரண நிதியாக 1500 கோடி ரூபாய் கேட்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு தொகையையும் சேர்த்து மொத்தமாக 1,499 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.