fbpx
Others

அயோத்தியா மண்டபம் நிர்வாகம்இனிஅறநிலையத்துறை யிடம்

ஸ்ரீ ராம் சமாஜ் என்ற தனியார் அமைப்பு சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை நிர்வகித்து வருகிறது. இந்த மண்டபத்துக்குள் சாமி சிலைகளை வைத்து வழிபாடு செய்வதாகவும், உண்டியல் வைத்து பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இதை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பி்ன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில், கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதி பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் அமைப்பு இது கோவில் கிடையாது, தனியார் மண்டபம். ஆகம விதிகளின்படி இங்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. ராமநவமி, பிரதோசம் அன்று வழிபாடு நடத்தப்படும் என்று வாதிடப்பட்டது.
ஆனால் அரசு தரப்பில், இது கோவில்தான். சாமி சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. பூஜைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
துளசி தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. உண்டியல் வைத்து பணம் வசூலிக்கப்படுகிறது என்று வாதிடப்பட்டது. எனவே அது கோவிலா, மண்டபமா என்ற கேள்விக்கு இந்த ரிட் வழக்கின் மூலமாக தீர்வு காண முடியாது. மனுதாரர் சம்பந்தப்பட்ட அமைப்பில் முறையிட்டு பரிகாரம் தேடிக்கொள்ளலாம். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பின் தலைவர் எஸ். ரவிச்சந்திரன், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
எங்களது அமைப்பு 1958-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, 700-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களால் லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் செயலாற்றி வருகிறது. அயோத்தியா மண்டபத்தில் கலை, கலாசாரம், சமயம் தொடர்பான பல்வேறு ஆன்மிக கூட்டங்களும், திருமணங்களும் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ராமநவமியை முன்னிட்டு அயோத்தியா மண்டபத்தில் ராமபிரான், லட்சுமணன், சீதாதேவி, அனுமன் ஆகியோரது சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த மண்டபம் சாதி, சமய, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஏழை, எளியோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அயோத்தியா மண்டபத்தை கோவில் எனக்கூறி அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தக்காரை நியமித்து இருப்பது சட்டவிரோதம்.
எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அறநிலையத்துறையினர் அயோத்தியா மண்டபத்துக்குள் நுழையவும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், ‘இந்த அமைப்பில் ஏற்கனவே நிர்வாகிகளாக இருந்த ஒரு சிலர் தங்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பொய் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் இந்த அமைப்பை அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
அயோத்தியா மண்டபம் என்பது கோவில் அல்ல. அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த தனியார் அமைப்புக்குள் நுழைய முற்பட்டதை எதிர்த்து போராடிய மூத்த குடிமக்களை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணத்துக்காக இந்த மண்டபம் ஏற்கனவே புக்கி்ங் செய்யப்பட்டுள்ளதால், அங்கு வருபவர்கள் யாரையும் தடுக்கக்கூடாது” என்று வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், “தக்காரை நியமித்த அறநிலையத்துறை உதவி ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். அதன்படி கோவில் நிர்வாகத்தை தக்கார் நேற்று ஏற்றுக் கொண்டார். அப்போது சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைதானவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு விட்டனர். அயோத்தியா மண்டப கோவிலில் வழக்கம்போல திறந்து வழிபாடு மற்றும் விழாக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியா மண்டபத்துக்குள் செல்லும் யாரும் தடுக்கப்பட மாட்டார்கள். திருமண மண்டபத்தை அவர்களே பயன்படுத்தலாம். இதுதொடர்பாக விரிவாக பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை” என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அதற்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை இந்த வழக்கில் எந்த ஒரு இடைக்கால தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது” என்று உத்தரவிட்டனர்.
இதற்கிடையே பதற்றமான சூழல் நிலவியதால், அயோத்தியா மண்டபத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. மேலிட இணைப்பொறுப்பாளர் பி சுதாகர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்து மக்கள் கூடி அவர்களுடைய பழக்க வழக்கங்கள் கலாசாரப்படி, பஜனைகள் நடத்தும் உண்டியல் இல்லாத இடத்தை, அறநிலையத்துறை கைப்பற்றி கணக்குகள் மற்றும் நிர்வாகத்தை மேற்கொள்ள துடிப்பது வேடிக்கையான செயல். இருப்பினும் இவ்வழக்கு கோர்ட்டில் இருக்கும் காரணத்தினால், நீதி வெல்லும் என நாம் எதிர்பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்

Related Articles

Back to top button
Close
Close