லாரியில் பிரத்யேகமாக ரகசிய அறை–320 கிலோ கஞ்சா-பறிமுதல்..
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும், சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்..இதற்காகவே போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.. அதேபோல கடல் வழியாகவும் போதைப்பொருட்கள் தமிழகத்துக்குள் நுழைந்து விடுகிறது என்பதால், கடற்கரை பகுதிகளிலும், தமிழகத்தின் எல்லைகளிலும் போலீசாரின் கண்காணிப்புகள்
தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன..இந்நிலையில், சென்னையில் ஒரு ஆக்ஷன் சம்பவத்தில் போலீசார் ஈடுபட்டனர்.. அதாவது, ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு அதிகளவில் கஞ்சா கடத்தி வருவதாக சென்னை மண்டல தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுதது, செங்குன்றம் நல்லூர் அருகிலுள்ள காரனோடை சுங்கச்சாவடியில் தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டு பணியக அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்தவழியாக தமிழக பதிவு எண்களுடன் வந்த லாரி ஒன்றை மடக்கி போலீசார் சோதனை செய்தனர்.அப்போது லாரியின் பாடியில் வழக்கத்திற்கு மாறாக ஒரு அடி உயரத்திற்கு பாடி கட்டமைப்பு இருந்ததை கண்டு போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது.. அதாவது அசோக் லேலண்ட் என்ற சிறிய ரக சரக்கு வாகனம் மீது, நீளமான தகரத்தை ஏற்றப்பட்டிருந்தது. எனவே, அதிகாரிகள் லாரியின் பாடியை ஆய்வு செய்தபோது, அதில் ரகசிய அறை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. பார்ப்பதற்கு வெற்று வாகனம் போலத்தான் இருந்துள்ளது. ஆனால், அதன் அடிப்பகுதியில் மிகவும் நேர்த்தியாக ரகசிய அறை அமைத்திருக்கிறார்கள்.. அதற்குள் 150 பொட்டலங்களாக 320 கிலோ கஞ்சாக்கள் இருந்துள்ளன.இதையடுத்து லாரி டிரைவர் உட்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கஞ்சா கடத்துவதற்காகவே லாரியில் பிரத்யேகமாக ரகசிய அறை ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், கஞ்சா கடத்துவதற்காக லாரியின் பதிவு எண், பாஸ்ட் டேக் போலியாக தயாரிக்கப்பட்டதாகவும் வாக்குமூலத்தில் கூறினார்கள்.. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்று, அங்கிருந்து கஞ்சா கடத்தியதும், கடத்தலில் பெரிய கஞ்சா கும்பலுக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் அம்பலமானது.இதையடுத்து, லாரியிலிருந்த 320 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.. அந்த கஞ்சாவின் மதிப்பு ரூ.2 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.. காஞ்சிபுரம் மாவட்டம், கெருகம்பாக்கம் லீலாவதி நகரைச் சேர்ந்த அப்துல் இப்ராஹிம், 58, திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் கங்கை நகரைச் சேர்ந்த மதன்பாபு, 29 என்ற இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.