பொங்கல் பரிசு 1000 ரூபாய்க்கு தடை : தமிழக அரசின் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது !
பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக கொடுப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இவற்றை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், 1000 ரூபாய் ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி, கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் பொதுநல மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்ததது. இந்த விசாரணையில் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு 1000 பொங்கல் பரிசு வழங்க தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
வசதியானவர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் தரக்கூடாது என பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட் நிராகரித்தது.
இந்நிலையில், ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தேவைபட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகி அ.தி.மு.க. நிவாரணம் தேடலாம் என மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தின.
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு 07.01.19 முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
வறுமைகோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் வழங்க மட்டுமே தடை. அரிசி, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்க தடை ஏதும் இல்லை எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.