இன்று சட்டசபையில் மானியகோரிக்கைமீதான விவாதம்..

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பின், முதல் பட்ஜெட் கூட்டத் தொடர், இம்மாதம் 5ம் தேதி தொடங்கியது. அன்று, 2026 – 27ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை, நிதி அமைச்சர் மரியவில்சன் தாக்கல் செய்தார்.மறுநாள் காலை, வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். 7ம் தேதி முதல், 11ம் தேதி வரை, இரண்டு பட்ஜெட் மீதும் விவாதம் நடந்தது. எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினர். ‘தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை’ என தெரிவித்தனர்.கடந்த 12ம் தேதி, அமைச்சர்கள் மரியவில்சன், வினோத் ஆகியோர், எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து பேசினர். கடந்த 13ம் தேதி முதல், நேற்று வரை, அரசு விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் சட்டசபை நடக்கவில்லை.நான்கு நாள் விடுமுறைக்கு பின், தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. இன்று முதல், அரசு துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது. இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது.ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், இரண்டு துறை மானிய கோரிக்கை மீதும் பேசுவர். அதன்பின், அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில், மாற்றுத் திறனாளிகள் துறையில், பதவி உயர்வு, கருணை அடிப்படையில் பணி, தொடர்பான கோப்புகளை கவனிக்கும் பொறுப்பு, சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி; நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கோப்புகளை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கவனிப்பர் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, அந்த துறைகளுக்கான மானிய கோரிக்கை விவாதத்திற்கும், அந்த அமைச்சர்கள் பதில் அளிக்க வாய்ப்புள்ளது.