8 கிலோ தங்க நகை கொள்ளை;கண்ணில் மிளகாய் பொடி தூவி அரங்கேறிய சம்பவத்தால் பரபரப்பு !
கோவையில் இன்று காலை பார்சல் சர்வீஸ் ஊழியர் எடுத்து சென்ற 8 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் மிளகாய் பொடியை தூவி கொள்ளையடித்து உள்ளனர்.
கோவையில் உள்ள பல்வேறு நகை கடைகளில் இருந்து தங்க நகைகளை சர்வதேச பார்சேல் சர்வீஸ் நிறுவனத்தின் மூலம் விமானத்தின் வாயிலாக வெளிநாட்டில் உள்ள தங்க கடைகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் அந்நிறுவன ஊழியரான ராஜஸ்தானை சேர்ந்த பிரித்வி சிங் என்பவர் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் 8 கிலோ தங்கத்துடன் விமானநிலையத்திற்கு புறப்பட்டார்.
சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி வழியாக பிரித்வி சிங் சென்றுகொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து வந்த பைக்கில் இருந்த மர்ம நபர்கள் பிரிதிவிசிங்கின் பைக்கை வழிமறித்தனர். இதில் நிலை தடுமாறிய பிரிதிவி சிங் பைக்கிலிருந்து கீழே விழுந்தார். கீழே விழுந்தும் அவர் தங்கம் இருந்த பையை எடுத்துள்ளார்.
இதை கண்ட அந்த மர்ம நபர்கள் பிரிதிவி சிங்கின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி , ஆயுதத்தால் தாக்கியதோடு அவரை பிடித்து சாக்கடையில் தள்ளி விட்டு பின் தங்க பையுடன் அதே பைக்கில் தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பிரிதிவி சிங் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.2.5 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.