சிங்கப்பூரில் கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஏப்ரல் மாதத் துவக்கத்தில் ஒரு மாத கால ஊரடங்கு உத்தரவை சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிஸெய்ன் லூங் அறிவித்திருந்த நிலையில், தற்போது ஊரடங்கு ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் தற்போது வரை 9 ஆயிரம் பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை 11 பேர் மரணித்துள்ளனர்.
முன்னதாக இந்த மாத துவக்கத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, அத்தியாவசிய சேவைகள், முக்கிய பொருளாதார காரணிகளைத் தவிர்த்து அனைத்தும் மூடப்படும் என்று பிரதமர் அறிவித்திருந்தார்.
மேலும், கரோனாவைக் கட்டுப்படுத்தும் சவாலான பணியில் நாடு தற்போது ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பான எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என்றும் லீ எச்சரித்திருந்தார்.
உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 24 லட்சமாக இருக்கும் நிலையில், சிங்கப்பூரில் இது 9 ஆயிரமாக உயர்ந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.