கோவை-வால்பாறை அருகே சாலையோரங்களில் காட்டெருமைகள் உலா-பொதுமக்கள் அச்சம்..
வால்பாறை அடுத்த பழைய வால்பாறை செல்லும் சாலையோரங்களில் கடந்த சில நாட்களாக காட்டெருமைகள் அதிக அளவில் நடமாடி வருவதால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகள் அடர்ந்த வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ள நிலையில், உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையோரங்களுக்கு வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், பழைய வால்பாறை செல்லும் சாலையில் பல இடங்களில் காட்டெருமைகள் கூட்டமாக சாலையோரங்களில் மேய்ந்து கொண்டும், சில நேரங்களில் சாலையைக் கடந்து சென்றும் காணப்படுகின்றன.குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயணிகள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சாலையில் திடீரென காட்டெருமைகள் தோன்றுவதால் விபத்து அபாயமும் அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.எனவே, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பொதுமக்களுக்கு தேவையான எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், வால்பாறை – பழைய வால்பாறை சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துதல், புகைப்படம் எடுக்க நெருங்கிச் செல்லுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். செய்திகளுக்காக கோவைமாவட்ட புகைபட கலைஞர் ஜெயப்பிரகாஷ் D
