பெமா காண்டு–மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்கஉள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 லோக்சபா தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ல் தேர்தல் நடபெற்றது. முன்னதாக, முதல்வர் பெமா காண்டு உள்பட பாஜகவை சேர்ந்த 5 வேட்பாளர்களுக்கு எதிராக யாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மேலும் 5 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களும் வாபஸ் பெற்றனர். முதல்வர் பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 50 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டு, கடந்த ஜூன் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 60 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அருணாச்சல பிரதேசத்தில் போட்டியின்றி வெற்றி பெற்ற 10 தொகுதிகளையும் சேர்த்து பாஜக 46 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 6 இடங்களிலும், என்சிபி 3 இடங்களிலும், அருணாச்சல மக்கள் கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. 3 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதன் மூலம் பாஜக மீண்டும் வெற்றி பெற்று
பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில், பாஜக 41 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. என்பிபி 5 தொகுதிகளையும், என்சிபி 4 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதா தளம் 7 தொகுதிகளையும் கைப்பற்றியது. இந்நிலையில், அதைவிட கூடுதல் இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கிறது பாஜக. இந்நிலையில் தற்போதைய பாஜக முதல்வரான பெமா காண்டு, மீண்டும் பாஜகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இன்று பாஜக மேலிட பார்வையாளர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் தருண் சுக் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக பெமா காண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மூன்றாவது முறையாக பெமா காண்டு அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முதல்வராகிறார். இன்று ஆளுநர் கே.டி.பர்நாயக்கை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் எனத் தெரிகிறது. நாளை பெமா காண்டு அருணாச்சல பிரதேச முதல்வராக 3வது முறையாக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்வர் பெமா காண்டுவின் தந்தை டோர்ஜி காண்டுவும் அருணாச்சல பிரதேசத்தில் முதல்வராகப் பதவி வகித்தவர்தான். 2011 இல் ஹெலிகாப்டர் விபத்தில் டோர்ஜி காண்டு காலமான பிறகு பெமா காண்டு தீவிரமாக அரசியலில் பணியாற்றத் தொடங்கினார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் முறையாக அருணாச்சல பிரதேச மாநில முதல்வராகப் பதவியேற்றார் பெமா காண்டு. அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு அவர் காங்கிரஸை விட்டு வெளியேறினார். அதே ஆண்டின் தொடக்கத்தில், அவர் அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியில் சேர்ந்தார், ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் பாஜகவில் சேர்ந்தார். மீண்டும் 2019ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் வென்று பாஜக சார்பில் முதலமைச்சர் ஆனார். தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார் பெமா காண்டு. அருணாச்சல பிரதேச மாநில முதல்வராவதற்கு முன், மாநிலத்தின் சுற்றுலா மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராகவும் இருந்துள்ளார்.