பொதுமக்கள்ஆன்லைன் மூலம் அளிக்கும் புகார்கள் மீதுகாவல்துறை தீர்வு
சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது சென்னை மாநகர காவல்துறை 48 மணி நேரத்தில் தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த 4 மாதங்களில் 4,700 புகார்கள் மீது மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி மாற்றத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு காவல்துறையை நவீனமயமாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் சென்னை மாநகர காவல்துறையில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.அதேநேரம் சென்னை மாநகர காவல்துறையில் சைபர் க்ரைம் பிரிவு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்களிடம் வெளிநாட்டு நபர்கள் மற்றும் வடமாநில மோசடி நபர்கள் பல்வேறு வகையில் மோசடி செய்து பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளை கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கும் வகையில் ‘முத்துவும் 30 திருடர்கள்’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களை வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் ஒருவர் தலைமையில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் என 30 காவலர்கள் கொண்டு தனிப்பிரிவு 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பொதுமக்களுக்கு எதிராகவும், சாதி, மதத்திற்கு எதிராக பதிவு செய்யும் நபர்கள், போலி வீடியோக்கள், புகைப்படங்கள் பதிவு செய்யும் நபர்களை கண்காணிக்கவும், தனி நபர்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் நபர்களையும் கண்காணித்து உடனுக்குடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பெரும்பாலும் பாலியல் புகார்கள், அரசியல் ரீதியான புகார்கள் தான் ஆன்லைன் மூலம் அதிகமாக அளிக்கப்பட்டு வருகிறது. அப்படி பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது சைபர் க்ரைம் போலீசாரால் 48 மணி நேரத்தில் விசாரணை நடத்தி தீர்வு காணப்படுகிறது. மோசடி உள்ளிட்ட புகார்கள் தான் அதிகபட்சமாக 1 வாரம் விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. வங்கி மோசடிகள், நிலப்பிரச்னை போன்ற புகார்கள் மீது தீர்வு காண்பது தான் சற்று கால தாமதம் ஏற்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநரில் ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான புகார்கள் தான் அதிகளவில் வருகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து போலீசார் அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் போன் மூலம் புகைப்படம் எடுத்து புகார் அளிக்கும் திட்டம் அதிகளவில் பொதுமக்களிடம்சென்றடைந்துள்ளது . இதனால் பொதுமக்கள் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக அனுப்பும் புகைப்படத்துடன் கூடிய புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவசர உதவி எண் 100 மூலம் அளிக்கும் புகார்கள் மீது உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ஆன்லைன் மூலம் கடந்த 2022ம் ஆண்டு சென்னை மாநகர காவல்துறைக்கு 1648 புகார்கள் வந்துள்ளது. அந்த புகார்களில் 1500க்கும் மேற்பட்ட புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் 2023ம் ஆண்டில் கடந்த 4 மாதங்களில் பொதுமக்களிடம் இருந்து 4,835 புகார்கள் பெறப்பட்டு 4,700 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாக புகார் அளிப்பவர்களை விட ஆன்லைன் மூலம் புகார்கள் அளிக்கும் நபர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. ஆன்லைனில் அளிக்கும் புகார்கள் மீது உடனே எடுக்கப்பட்ட நடவடிக்கை, விசாரணை அதிகாரி யார், எந்த நிலையில் வழக்கு உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்கள் புகார் அளித்த நபர்களுக்கு உடனுக்குடன் குறுஞ்செய்தி மூலமும் இ-மெயில் மூலமூம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் புகார்கள் மீது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது பழைய புகார்களின் நிலை என்ன…..?