சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!
Sathankulam issue, CBCID enquiry starts
தூத்துக்குடி:
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் படி, சிபிசிஐடி வழக்குப்பதிந்து விசாரணை தொடங்கியுள்ளது.
சாத்தான்குளத்திற்கு இன்று மேலும் 2 சிபிசிஐடி குழு வருகை தந்தது. ஜெயராஜ் கடை அமைந்துள்ள பகுதியில் சிபிசிஐடி விசாரணை நடத்தியது. மேலும் ஜெயராஜ் வீட்டிற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஜெயராஜ் மனைவி மற்றும் மகளிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியது.