சாத்தான்குளம் சம்பவம்..! பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு!
Sathankulam issue, CBCID plan to investigate people
தூத்துக்குடி:
சாத்தான்குளத்தில் தந்தை – மகன் கைது சம்பவத்தை நேரில் பார்த்த வியாபாரிகள், பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினர். இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணை அடிப்படையில் வழக்கை கொலை வழக்காக மாற்றி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களை தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
திங்கள் கிழமை மனு தாக்கல் செய்து காவலர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந் நிலையில், சாத்தான்குளத்தில் தந்தை – மகன் கைதை நேரில் பார்த்த பொதுமக்களிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
வியாபாரிகள், பொதுமக்கள், உறவினர்களை குறுஞ்செய்தி மூலம் அழைத்து சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, பணியில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரிடம் 2-வது நாளாக விசாரணை தொடர்ந்து வருகிறது.