அஸ்ஸாமில் ஒரு சில மக்கள் சிறுத்தைகளை கொன்று குவிப்பது சகஜமாகி வருகின்றது. தற்பொழுது மேலும் ஒரு சிறுத்தையை மக்கள் சிலர் அடித்துக் கொன்றுள்ளனர். இந்த வருடத்தில் அசாம் மக்களால் கொல்லப்பட்ட 5 ஆவது சிறுத்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.
கௌகாத்தி வனத்துறை பிரிவு அதிகாரிகளுள் ஒருவரான ஜித்தேந்தர் குமார் கூறியதாவது, ” சிறுத்தையை சிலர் பொறி வைத்துப் பிடித்து கொல்ல திட்டமிட்டுள்ளனர் என்ற செய்தி கேட்டு நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம்: அதற்குள் அந்த மக்கள் பொறியில் சிக்கிய சிறுத்தையை பிடித்து கொன்றுவிட்டனர்: சிறுத்தையின் தோல், நகங்கள், பற்க்கள் முதலியவற்றை தனித் தனியாக வெட்டி எடுத்துள்ளனர் பின்னர் அந்த சிறுத்தையை தூக்கிக் கொண்டு ஊர்வலமாக சென்றுள்ளனர்.”
இந்த சம்பவம் தொடர்பாக சுமார் ஏழு நபர்களை பிடித்து வழக்குப் பதிவு செய்து வனத்துறையினர் விசாரித்துள்ளனர். சிறுத்தை அந்த பகுதியில் சிறிது காலம் சுற்றி திரிந்ததாகவும்,அந்த பகுதியில் உள்ள மக்களின் ஆடு, கோழி முதலியவற்றை வேட்டையாடியதாகவும், இதனால் தான் சிறுத்தையை கொன்றோம் எனவும் கைதானவர்கள் கூறியுள்ளனர்.
இந்த மக்கள் சிறுத்தையை கொன்று ஊர்வலமாக கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த மக்கள் அனைவரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.