முதுகு வலி, தசை பிடிப்பு, முழங்கால் வலியா ? நீங்கள் தனியாக இல்லை. முழுஊரடங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக அமலில் உள்ள நிலையில், உடற்பயிற்சி இல்லாமல் வீட்டிலிருந்தே வேலை செய்யும் பலருக்கும் இதே நிலை தான்.
“நம் உடலுக்கு தோதான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளாதலால் தான் இந்த உபாதைகளை சந்திக்க வேண்டியுள்ளது”, என்கிறார்கள் உடல் சிகிச்சை நிபுணர்கள். மேலும் இதை சரி செய்ய சில மாற்றங்களை நம் அன்றாட வாழ்வில் கொண்டுவந்தாலே போதும் வலி இல்லாமல், இந்த ஊரடங்கு நிலையிலும் மகிழ்ச்சியான மனநிலையை கொண்டுவர முடியும் என்கிறார்கள்.
வலிகள் நீங்க:
1. இடுப்பு வலி எதனால் வருகிறது – அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது, இடுப்பின் முன்புறத்தில் உள்ள தசைகள் சுருக்கப்பட்டு இறுக்கமாகி வலி ஏற்படுகிறது.
செய்ய வேண்டியது – முதலில் நேர நின்று, உங்கள் கால்களை அகட்டி, கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும். இரு முழங்கால்களையும் சற்று வளைத்து, வலது காலை நன்கு முன்னோக்கி நகர்த்தவும்.
உங்கள் முதுகை நேராக வைத்து (இடுப்பை வளைக்காமல்) இடுப்பை முன்னோக்கி அழுத்தி இடது குதிகாலை தரையில் இருந்து தூக்கவும். உங்கள் இடது இடுப்பு மற்றும் தொடையின் குறுக்கே ஒரு நீட்டிப்பை நீங்கள் உணர வேண்டும். சிலவினாடிகள் இதே நிலையில் இருந்த பின்பு கால்களை மாற்றவும். இதை மீண்டும் முயற்சி செய்யவும்.
2. கழுத்து மற்றும் தோள்பட்டை வலி
எதனால் வருகிறது- அதிக நேரம் தவறான நிலையில் லேப்டாப் மற்றும் செல்போன் உபயோகிப்பதால்.
செய்ய வேண்டியது- சமநிலையில் நேராக நின்று, ஒரு கையை தலைக்கு மேல் உயர்த்தி, மற்றொரு பக்கமாக தலையை மெல்ல இழுக்க வேண்டும். இதை மற்றொரு முதுகின் பின்புறம் வைத்து தோள்பட்டையை கீழே இழுத்தும் செய்யலாம்.
3. முழங்கால் வலி
எதனால் வருகிறது – நீண்ட நேரத்திற்கு உங்கள் முழங்கால்கள் 90 டிகிரி கோணத்தில் வைத்திருப்பதால்.
செய்ய வேண்டியது – நேராக நின்று, இரு கால்களையும் அகட்டி, மெல்ல காலை பின்புறமாக உயர்த்தி ஏதேனும் நாற்காலியின் மீது வைக்கவும். நின்றபடியே வலது காலை சற்று கீழே இறக்குவது போல் மடக்கவும். இதை செய்யும் பொழுது உங்களின் இடது இடுப்பு தசை மற்றும் தொடைப்பகுதிகள் தளர்வதை உணரலாம்.
இதேபோன்று, வலதுபுற கால்களுக்கும் செய்யவும்.
இது மட்டுமல்லாமல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல்,முப்பது நிமிடத்திற்கு ஒரு முறை 1-2 நிமிடமாவது எழுந்து நடமாட வேண்டும்.மேலும் இது கோடை காலமாதலால் தேவையான அளவு தண்ணீர், மற்றும் நீர்ச்சத்து அதிகமுள்ள பழவகைகளை உட்கொள்வது மிகவும் அவசியமாகும்.