கொரோனா தடுப்பு தீவிரம்…! மத்திய குழு இன்று தமிழகம் வருகை!
Central team visits today in tamilnadu
சென்னை,:
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட, மத்திய குழு இன்று சென்னை வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், தொற்று பரவல் அதிகமாகி, நாளுக்கு நாள் இறப்புகளும் அதிகரித்து வருகின்றன. இது குறித்து ஆய்வு செய்ய, ஐந்து பேர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழுவினர், இன்று மாலை, 5:00 மணிக்கு, கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து, தனி விமானத்தில், சென்னை வருகின்றனர்.
குழுவில், மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அஹூஜா தலைமையில், இணை செயலர்கள் ராஜேந்திர ரத்னு, சுபோத் யாதவா, சுவரூப் சாஹு, சதீஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சென்னைக்கு வரும், மருத்துவ நிபுணர்கள் குழுவினர், தொற்று பரவல் அதிகமுள்ள பகுதிகளில் ஆய்வு நடத்துகின்றனர். முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலர் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். வரும், 10ம் தேதி, டெல்லி திரும்புகின்றனர்.