டிக்டாக்குக்கு பதிலாக மாற்று செயலி…! புதிய திட்டத்தை தொடங்கிய மத்திய அரசு!
Alternate for tiktok app in india
டெல்லி:
பள்ளி மாணவர்கள், புதுமையான செயலிகளை உருவாக்கும் வகையில் புதிய திட்டத்தை, மத்திய அரசு, துவங்கியுள்ளது.
சீனாவின், டிக் டாக் உட்பட, 59 செயலிகளை, சமீபத்தில், மத்திய அரசு தடை செய்தது. இதையடுத்து, நம் நாட்டில், புதுமையான செயலிகளை உருவாக்க, ஊக்கம் தரப்படுகிறது. லட்சக்கணக்கானோர், இந்திய செயலிகளைப் பதிவிறக்கம் செய்யத் துவங்கியுள்ளனர்.
இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ‘தற்சார்பு இந்தியா’ முன் முயற்சியின் ஒரு பகுதியாக, ‘நிடி ஆயோக்’ கின், அடல் புத்தாக்க திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு செயலி மேம்பாட்டு பாடத் திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.
மொபைல் செயலி, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தின் துணையுடன் துவங்கப்பட்ட இத்திட்டத்தில், அனைத்து மாணவர்களுக்கும், ‘ஆன்லைன் கோர்ஸ்’ இலவசமாக நடத்தப்படும்.
இவற்றில், மாணவர்கள், செயலிகளை உருவாக்கும் வகையில், 6 திட்டங்கள் இடம்பெறுகின்றன. ஆசிரியர்களுக்கும் இதுபற்றி ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.