Others
தமிழ்நாடுஆளுநர் மாளிகையின் அழைப்பிதழ்—-குடியரசு தின விழா—26 / 1 / 23
- ஜனவரி 4ஆம் தேதி நடந்த நிகழ்வு ஒன்றில், “ தமிழ்நாடு என கூறுவதை விட தமிழகம் என சொல்வதே பொருத்தமாக இருக்கும்” என ஆளுநர் பேசியது சர்ச்சையானது. அதற்கு பிறகு ஆளுநர் மாளிகை பொங்கல் விழாவுக்காக அனுப்பிய அழைப்பிதழ் மீண்டும் சர்ச்சையானது. ஆளுநர் மாளிகையின் அந்த பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி என குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், தமிழ்நாடு அரசின் இலச்சினைக்கு பதில் இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றிருந்தது. ஆளுநர் மாளிகையின் அந்த அழைப்பிதழுக்கு பல்வேறு கட்சிகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்தன. இந்த தமிழ்நாடு சர்ச்சை குறித்து டி.ஆர்.பாலு, அமைச்சர் ரகுபதி அடங்கிய குழுவினர் குடியரசு தலைவரை சந்தித்து ஆளுநரின் போக்கை எதிர்த்து மனுவை வழங்கினர். இதற்கு பிறகு டெல்லி சென்றார். ஆளுநர் தரப்பிலிருந்து தமிழ்நாடு பெயர் சர்ச்சை குறித்து விளக்க கடிதமும் வந்தது. அதில் தான் தமிழகம் என குறிப்பிடலாம் என சொன்னதை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது என விளக்கமளித்தார் ஆளுநர்..
ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழ்
இந்நிலையில் வரும் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் வரவேற்பு அழைப்பிதழ் பேசுபொருளாகியுள்ளது. சென்ற முறை இந்திய அரசின் இலச்சினையும் தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இந்த அழைப்பிதழில் தமிழ்நாடு இலச்சினை, திருவள்ளுவர் ஆண்டு மட்டுமில்லாமல் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, தமிழ்நாடு ஆளுநர் என குறிப்பிடப்பட்டுள்ளது.