டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். டிடிவி தினகரனின் அடையாறு இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். இன்று நடைபெற்ற சந்திப்பில், இணைந்து செயல்படுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இறுதியாக சசிகலாவுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், அதே ஆண்டு ஜூலையில் டிடிவி தினகரனை சந்தித்து பேசினார். ஜெயலலிதா மறைவுக்கு பின் கடந்த நான்கு ஆண்டுகளாக இரட்டை தலைமையாக அதிமுக இயங்கி வந்தது.சமீபத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருக்குமான மோதல் இந்திய தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என வலுத்து வருகிறது. இதனிடையே சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட போவதாக ஓ.பன்னீசெல்வம் கூறிவருகிறார், இந்த சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Others