சென்னை ஐஐடி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

சென்னை ஐஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 25 வயதான ரஞ்சனா குமாரி எனும் மாணவி சென்னை ஐ.ஐ.டியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள சபர்மதி பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்தார். ரஞ்சனா கடந்த 2 தினங்களாக தனது பெற்றோரைத் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், விடுதி பாதுகாப்பு ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
விடுதி ஊழியர்கள் மாணவி தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது ரஞ்சனாவின் விடுதி அறையின் கதவு பூட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற ஊழியர்கள், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 5 மாதத்தில் இது 3-வது தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது.















