கேரள காய்கறி கடையின் கல்லாவை கொள்ளையடித்த பலே திருடன் – சிசிடிவி-யில் பதிவானது
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு காய்கறி கடையில் திருடன் ஒருவன் புகுந்து , சிசிடிவி இணைப்பை துண்டித்து கல்லாவை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், எடரிக்கோடு திரூர் சாலையில் முஜீர் என்பவர் காய்கறி மற்றும் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று கடையின் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் தொழுவதற்காக பள்ளிவாசலுக்கு சென்றனர்.
இதை அறிந்துக்கொண்ட ஒரு திருடன் அந்த கடைக்குள் சென்று முதலில் அங்கு இருந்த சிசிடிவி இணைப்பை துண்டித்து விட்டான். பின்னர் அந்த கடையின் கல்லாவில் இருந்த பணத்தையும் , வங்கியில் செலுத்துவதற்காக வைத்திருந்த பணத்தையும் கொள்ளையடித்தான். அதன்பின் அங்கிருந்த பழங்களில் தன்னால் எவ்வளவு சாப்பிடமுடியுமோ சாப்பிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த மற்றொரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு இவ்வாறு கொள்ளையடித்த பலே திருடனை கோட்டக்கள் போலீசார் தேடி வருகின்றனர்.