பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை!
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. இதனால் சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிலவியல் துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்:
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப்பகுதியில் உள்ள மின்டானோ தீவில், டாவோ நகரை மையம் கொண்டு இன்று காலை சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.
“நிலத்தடியில் 59 கி.மீ ஆழத்தில் இந்தப் பூகம்பம் நிலைகொண்டு இருந்து. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.9 ஆக பதிவாகி இருந்தது. இந்தப் பூகம்பத்தால், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி அலைகள் எந்நேரமும் உருவாகலாம் எனவே எச்சரிக்கையாக இருக்கவும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூகம்பத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றி இது வரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கம் குறித்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், “பிலிப்பைன்ஸில் உள்ள ஜெனரல் சான்டோஸ் நகரை மையம் கொண்டு பூமிக்குக் கீழே 60 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மிகசக்தி வாய்ந்த சுனாமி அலைகள், இந்தோனேசியா கடற்கரையையும், பிலிப்பைன்ஸ் கடற்பகுதியையும் தாக்க வாய்ப்புள்ளது எச்சரிக்கையாக இருக்கவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.