விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி திரும்பத் தராமல் இந்தியாவை விட்டு வெளியேறியவர். 9000 கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி தராமல் வெளிநாட்டில் 2016-ம் ஆண்டில் இருந்து தங்கியிருக்கிறார் விஜய் மல்லையா.
இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
இதற்கிடையில், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி எம்மா அர்புத்னாட், விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம் என உத்தரவிட்டுள்ளார். மேலும் 14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவிற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.















