விஜய் மல்லையா தப்பி ஓடிய குற்றவாளி… சொத்துகளை அரசு பறிமுதல் செய்யலாம்; பொருளாதார சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!

9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தப்பி ஓடிய குற்றவாளி என்று பொருளாதார சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்திய பொதுத்துறை வங்கிகள் பலவற்றில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார்.
விஜய் மல்லையா வாங்கி திரும்ப செலுத்தாத கடனுக்காக அவரது சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள பணமோசடிகளை தடுக்கும் சிறப்பு நீதிமன்றதை அமலாக்கத்துறை நாடியது.
இந்த நிலையில் விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும் மேல்முறையீடு செய்யும் வரை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி என்று அறிவித்ததை நிறுத்தி வைக்குமாறு விஜய் மல்லையா தரப்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதன் மூலம் கடனுக்கு ஈடாக விஜய் மல்லையாவின் சொத்துகளை அரசு எளிதாக பறிமுதல் செய்ய முடியும்.















