கோவை மருத்துவமனையில் ஓ. பன்னீர்செல்வம் அனுமதி!

ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோவை சென்றுள்ளார். கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 4 நாள் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து காரில், கோவை ராமநாதபுரம் ஆர்ய வைத்திய சாலை மருத்துவமனைக்கு சென்றார். இரவு 7 மணியளவில் இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதுகுவலியால் நீண்ட நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் அவதிப்பட்டு வருகிறார். தொடர்ந்து 4 நாள் இங்கு தங்கியிருந்து, கேரள பாரம்பரிய சிகிச்சை (ஆயுர்வேத மசாஜ்) மேற்கொள்ள உள்ளார். பல்வேறு வகையான இயற்கை மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய்கள் உதவியுடன் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
முன்னதாக, அவரிடம் கோவை வருகை குறித்து, நிருபர்கள் கேட்டபோது, “முழுக்க முழுக்க சொந்த விஷயமாக வந்துள்ளேன். அரசியல் தொடர்பான கருத்துகள் எதுவும் சொல்வதற்கு இல்லை” என்றார்.















