ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆலையை ஆய்வு செய்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.
இந்த பரிசீலனையை ஆய்வு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என இன்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.