சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூடலாமா? ஐகோர்ட் கேள்வி!
Chennai high court asks about tasmac closing

சென்னை:
சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. இந் நிலையில் தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதாவது, மாணவர்களுக்கு சத்துணவு மற்றும் முட்டை வழங்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனிமனித இடைவெளியை மாணவர்கள் பின்பற்றுவதில் பிரச்னை ஏற்படும் என்பதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு முட்டை வழங்க தற்போது முடியாது. என்று தெரிவித்தார்.
இதனை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ‘ சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது என்பதால் மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியவில்லை. அப்படியானால், சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.
பள்ளிகளில் வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறையேனும் முட்டை வழங்க வேண்டும் அதனை எப்படி வழங்குவது என்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
















