மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்க முடியாது – நீதிமன்றம் திட்டவட்ட முடிவு.
மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கோரிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணுவின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவசாய பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் சுமார் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
நிவர்வாணப் போராட்டம் போன்ற போராட்டங்கள் நடத்தியும் பிரதமர் மோடி விவசாயிகளை நேரில் சந்தித்து பேசவில்லை. அதனால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் தமிழகம் திரும்பினர். அதனால் சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்தனர்.
அப்போது அதில் குறுக்கிட்ட தமிழக அரசு சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்கமுடியாது என்று தமிழக அரசு தெரிவித்தது. இதை தொடர்ந்து மெரினாவில் போராட்டம் நடத்த அய்யாகண்ணுவிற்கு அனுமதி வழங்கமுடியாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.