சென்னை– 3 நாளில் 42 லட்சம் ரூபாய்–காவல் துறை வசூல்!
-
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக, 3 நாட்களில், 42 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், திருத்தி அமைக்கப்பட்ட போக்குவரத்து சட்டத்தின்படி, உயர்த்தப்பட்ட புதிய அபராதத் தொகை வசூலிக்கும் முறை கடந்த 26-ம் தேதி சென்னையில் அமலுக்கு வந்தது. அதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமன்றி, அவர்களுடன் பயணிக்கும் நண்பர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாடகை கார், ஆட்டோக்களில் பயணிப்பவர்களுக்கு பொருந்தாது.ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அரசின் அவசர போக்குவரத்திற்கு வழி விடாத நபர்களிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். இதேபோல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல சட்டங்கள் புதிதாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி விதிமீறலில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, 3 நாட்களில், 6 ஆயிரத்து187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 42 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.இதில், 2 ஆயிரத்து 293 பேர் 16 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயை உடனடியாக செலுத்தினர். 26 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை செலுத்த வேண்டியிருப்பதாக காவல் துறை குறிப்பிட்டுள்ளது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி நான்கில் ஒரு பங்கு தான் அபராதம் விதித்து வருவதாகவும், விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் சென்னை காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.