புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது தளபதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

புல்வாமாவில் பிப்ரவரி 14-ம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர். இந்த கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள பின்க்லான் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு, உளவுத்துத்துறை மூலமாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். விடிய விடிய நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், ராணுவ வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ- முகம்மது அமைப்பின் தளபதி அப்துல் ரஷீத் காசி மற்றும் கம்ரான் என்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் அப்துல் ரஷீத் காசி என்பது குறிப்பிடத்தக்கது.















