fbpx
Others

எம்.பி. பிரமோத் திவாரி–விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன

சிபிஐ, அமலாக்கத் துறை (இ.டி) உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது என நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி புகார் தெரிவித்துள்ளார்.இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தது. இதில், பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சியினர் மீது சிபிஐ, இ.டி போன்ற விசாரணை அமைப்புகள் வேண்டுமென்றே தவறாக பயன்படுத்தப்படுகின்றன. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் இதற்கு சிறந்த உதாரணங்களாக உள்ளனர்.அதேபோன்று, அசாமில் நடைபெற்ற காங்கிரஸ் நியாய யாத்திரையின் போதும் மாநில அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. நாட்டில் எழுதப்படாத சர்வாதிகாரம் நிலவி வருகிறது. இவ்வாறு பிரமோத் தெரிவித்தார்.இடைக்கால பட்ஜெட்டுக்கு முந்தையஅனைத்துக் கட்சி கூட்டம் நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமை தாங்கினார். ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பும் இதுபோன்ற சந்திப்பு நடைபெறுவது வழக்கமாக உள்ளது.இந்த கூட்டத்தில், ஆளும் தரப்பில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் பங்கேற்றனர். எதிர்க்கட்சி தரப்பில், காங்கிரஸைச் சேர்ந்த கே.சுரேஷ், திரிணமூல் காங்கிரஸின் சுதிப்பந்தோபாத்யாய, திமுகவின் டி.ஆர்.பாலு, சிவசேனாவின் ராகுல் ஷெவாலே, சமாஜ்வாதி கட்சியின் எஸ்டி ஹசன், ஜேடியூவின் ராம்நாத் தாக்குர், தெலுங்கு தேசம் கட்சியின் கல்லா ஜெயதேவ் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.  பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. பிப்.1-ல் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 9-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close