Others
அண்ணா பல்கலைக்கழகம்—தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம்.
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புகளை தமிழ் வழியிலும் மாணவர்கள் படிப்பதற்கு முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் வழங்கப்பட்டன.அதன்பிறகு பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளிலும் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் 16 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பாக உறுப்பு கல்லூரிகளாக இயங்கி வருகின்றன. இருப்பினும் தமிழ் வழியில் படிப்பதற்கு மாணவர்கள் மத்தியில் போதிய ஆர்வம் இல்லாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, உள்ளிட்ட 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 உறுப்பு கல்லூரிகளில் ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகள் நீக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.