அமல்ராஜை சென்னை போலீஸ் கமிஷனராகத் தமிழக அரசு முறைப்படி நியமித்துள்ளது….
சென்னை மாநகரக் காவல் ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ. அமல்ராஜ் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ்-ஐ தேர்தல் ஆணையம் மாற்றியதைத் தொடர்ந்து, அபின் தினேஷ் மோடக் தற்காலிகமாக அந்நியமனத்தைப் பெற்றிருந்தார்; மேலும் கடந்த ஏப்ரல் மாதம் தாம்பரம் காவல் ஆணையர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்தவரான அமல்ராஜ், நாகர்கோவில் கார்மல் பள்ளியில் மேல்நிலைப் படிப்பையும், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்தவர்; கல்லூரி காலத்தில் சிறந்த ஹாக்கி விளையாட்டு வீரராகவும், தேசிய மாணவர் படையில் (NCC) அங்கம் வகித்தவருமான இவர், 1996 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரி ஆவார். திருப்பூர் ஏஎஸ்பியாகத் தனது காவல் பணியைத் தொடங்கி, மதுரை, தர்மபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களின் எஸ்பியாகவும், திருச்சி, சேலம், கோவை ஆகிய மூன்று முக்கிய மாநகரங்களின் காவல் ஆணையராகவும், ஏடிஜிபியாகப் பதவி உயர்வு பெற்று கமாண்டோ பிரிவு மற்றும் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராகவும் பல்வேறு உன்னதப் பொறுப்புகளை வகித்த பெருமை இவருக்கு உண்டு. காவல் பணியிடையே மனிதவள மேலாண்மையில் எம்பிஏ மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ள இவர், சிறப்பான பணிக்காகக் குடியரசுத் தலைவர் பதக்கம் மற்றும் முதலமைச்சரின் பதக்கங்களை வென்றுள்ளார். தேசிய மற்றும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று மாநில சாம்பியன் பட்டம் வென்றதுடன், திருச்சி மற்றும் கோவையில் உலகத் தரம் வாய்ந்த துப்பாக்கி சுடும் தளங்களையும், கோவை மற்றும் சென்னை எழும்பூரில் மாநிலத்தின் முதல் போலீஸ் மியூசியங்களையும் அமைத்துத் தனி முத்திரை பதித்தவர்; அதோடு சேலம், கோவை, திருச்சியில் நவீன சிசிடிவி கட்டுப்பாட்டு அறைகளை அமைத்ததன் மூலம் அங்கு குற்றங்களை 40 சதவீதம் வரை குறைத்துக் காட்டியுள்ளார். நிர்வாகத் திறமை மட்டுமின்றி எழுத்துத் துறையிலும் ஆர்வம் கொண்ட இவர், “காவல்துறையினருக்கு வெற்றி தரும் மேலாண்மைப் பண்புகள்”, “வெற்றியாளர்களின் வெற்றிப் படிகள்”, “வெல்ல நினைத்தால் வெல்லலாம்”, “சிறகுகள் விரித்திடு”, “போராடக் கற்றுக்கொள்” ஆகிய ஐந்து வழிகாட்டுதல் நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது;