பாஜக—நாராயணன் திருப்பதி முக்கிய பதவி
: திமுக மற்றும் திமுகவின் கூட்டணி கட்சியினர் சொல்லும் கருத்துகளுக்கு எல்லாம் தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிலடி கொடுத்து வரும் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பொதுத்துறை நிறுவனத்தின் இயக்குநராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட ஊரக மின்வசதியாக்க பொதுத்துறை நிறுவனத்தின் இயக்குநராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் பாஜகவின் நாராயணன் திருப்பதி.தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுக்கு முக்கிய பதவிகளை வழங்கி வரும் தேசிய தலைமை, சமூக வலைதளங்களில் தொடர்ந்து களமாடும் நாராயணன் திருப்பதிக்கும் முக்கிய பதவியைக் கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜகவின் மூத்த நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகளை மத்திய பாஜக அரசு அவ்வப்போது வழங்கி வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர்களாகச் செயல்பட்ட தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் ஆகியோருக்கு ஆளுநர் பதவிகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன், சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற நிலையிலும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.அண்மையில் பாஜக முன்னாள் எம்.பி சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும் சமீபத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்புவுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. இப்படியாக, கட்சிக்காக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதோடு, நியமன பதவிகளையும் வழங்கி குஷியாக்கி வருகிறது பாஜகவின் தேசிய தலைமை.. இந்நிலையில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களின் ஒவ்வொரு கருத்துக்கும் சரமாரியாக பதிலடி கொடுக்கும் தமிழ்நாடு பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிக்கு ஊரக மின்வசதியாக்க பொதுத்துறை நிறுவனத்தின் இயக்குநர் பதவியை வழங்கியுள்ளது மத்திய பாஜக அரசு. நாராயணன் திருப்பதி 1987ஆம் ஆண்டு முதல் பாஜக உறுப்பினராக இருந்து வருகிறார்.
நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பொதுத்துறை நிறுவனமான RECLindia நிறுவனத்தின் இயக்குனராக டெல்லியில் பொறுப்பேற்று கொண்டேன். அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிரதமர் மோடி, பாஜக தேதிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரின் ஆசி வேண்டுகிறேன். மேலும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.