‘மினி கோயம்பேடாக’ மாறும் கடலூர்..! ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா
107 corona cases identified in cuddalore
கடலூர்: சென்னை கோயம்பேடு சென்று வந்தவர்களில் கடலூரில் 107 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் கோயம்பேடு சந்தையிலிருந்து கடலூர் சென்ற தொழிலாளர்களில் இன்று மட்டுமே 107 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. கோயம்பேடு சென்று வந்த தொழிலாளர்கள் 129 பேர் உட்பட மொத்தம் 160 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து பேட்டியளித்த கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன், கடலூரில் இதுவரை 699 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தை உடன் தொடர்புடையவர்கள். இன்று வெளியான 217 பரிசோதனை முடிவுகளின்படி, 107 தொழிலாளர்களுக்கு கொரோனா பரவி இருக்கிறது என்றார்.
கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் தமிழகத்தில் 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் தான் அதிக பாதிப்பு இருக்கிறது.