கவர்னரைதிரும்ப அனுப்பஅதிகாரமும் கிடையாது….?
தமிழகத்தில் பிற மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று கோமாளித்தனமாகஉளறுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் வீரபாண்டியில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா, “நவம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியும், தமிழக காவல்துறை தந்திரமாக செயல்பட்டு ஒரு சில இடங்களுக்கு அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது காவல்துறையின் ஈரல் அழுகி போயுள்ளது என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதை நினைவு படுத்துவதாக இருக்கிறது. பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து திருமாவளவன், யாசின் மாலிக்-ன் கைக்கூலி சீமான் போன்றோர் நடத்திய மனித சங்கிலிக்கு அரசு உளவுத்துறை அனுமதியை பெறவில்லை. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக மனித சங்கிலி நடத்திய திருமாவளவன், சீமான் இருவரும் பிரிவினைவாதிகள், தீய சக்திகள் எனத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவுடனான கூட்டணி தற்போதும் தொடர்கிறது. அதிமுக உட்கட்சி விவகாரங்களில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார். கோவை கார் குண்டுவெடிப்பிற்கு மறு நாளே, அதில் தொடர்புடையவர்கள் கேரளாவில் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கோவை குண்டுவெடிப்பு என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் என முதல்வர் கூறியதற்கு பின்னால் ஓட்டு வங்கியாக கூட இருக்கலாம். நாங்கள் கைது செய்யவில்லை, மத்திய அரசு தான் கைது செய்தது என்று சொல்லிக் கொள்வதற்காக முதல்வர் என்.ஐ.ஏ விசாரணை கோரி இருக்கலாம். அதனால் என்.ஐ.ஏ., விடம் இந்த வழக்கை ஒப்படைக்க முதல்வர் கூறுவது ஒரு நாடகம் ஆகும். பல தீவிரவாத வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்த என்.ஐ.ஏ இந்த வழக்கை விசாரிப்பதால் அதன் நடவடிக்கைகள் சரியாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை என்றார்.தொடர்ந்து தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று திமுகவினர் கூறி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கவர்னர் யார் வீட்டு சர்வன்ட்? கவர்னரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அவரை திரும்ப அனுப்ப வேண்டும் என்று சொல்வதெல்லாம் கோமாளித்தனம். அதற்கு அதிகாரமும் கிடையாது. இது குறித்து திருமாவளவன் போன்ற சில்வண்டு கட்சிகள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அவர் ஒரு தீய சக்தி, பிரிவினைவாதி. அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால் திமுகவில் உள்ளவர்கள் கவர்னரை மாற்ற கூறுவது 100 சதவீத அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே கவர்னரை மாற்ற சொல்வது தவறானது. இதனை நிறுத்திக் கொள்வது திமுகவினருக்கு நல்லதாகும். வருகின்ற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தான் முதன்மையானது. கருத்துக்கணிப்புகளையும் தாண்டி அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என கூறினார்.தமிழகத்தில் பிற மாநிலத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக் கூடாது என்று சீமான் சொல்வது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், “பிரபாகரன் ஆமைக் கறி ஊட்டி விட்டதாக கூறும் கோமாளியான தமிழரே அல்லாத சீமான், தமிழர்களை பற்றி பேச என்ன இருக்கிறது. பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு அங்கு ஓட்டுரிமை வழங்கக் கூடாது என சீமான் சொல்வாரா? அவரே வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர் தான். எனவே இப்படி உளறும் கோமாளித்தனத்தை அவர் நிறுத்திக் கொள்வது நல்லது.சோனியா தலைமையிலான தமிழ் விரோத காங்கிரஸ் கட்சி பெங்களூரில் 30 ஆண்டுகளாக வள்ளுவர் சிலையை சாக்குபடுதாவில் சுற்றி வைத்திருந்தது. பாரதிய ஜனதா கட்சியின் முதல் முதல்வராக எடியூரப்பா வந்ததும் அந்த சிலை திறக்கப்பட்டது. பெங்களூர் மாநகராட்சியில் 18 தமிழர்கள் வேட்பாளர்கள் ஆக நிறுத்தப்பட்டனர். சீமான் போன்றவர்கள் அரசியலில் விரும்பத்தகாத சக்திகள். மொழி உணர்வை, மாநில உணர்வை தூண்டி விடுபவர்கள்” என்று கூறினார். மேலும் மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருவது நல்லது தானே. தமிழகத்திற்கான திட்டங்கள் அதிகரிக்கும் எனவும் ஹெச்.ராஜா கூறினார்


