வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா ! பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும்தப்பியோட்டம்..?
வாணியம்பாடியில் பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் நபர்கள் சிலர் பணத்தை வீசி சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வாணியம்பாடி அருகே அழிஞ்சிகுளம் மற்றும் பெத்தவேப்பம்பட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று இரவு முதல் வாணியம்பாடியில் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பணம் பட்டுவாடா செய்வதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. அப்பகுதியில் வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.அதன்படி, அப்பகுதிக்கு அதிகாரிகள் சென்றனர். தொடர்ந்து, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த போது பறக்கும் படை அதிகாரிகளை பார்த்தவுடன் பணத்தை தூக்கி வீசிவிட்டு நபர்கள் தப்பி ஓடினர். பறக்கும்படையினரை பார்த்தவுடன் ரூ.2.38 லட்சம், வாக்காளர் பட்டியலை வீசிவிட்டு தப்பியோடியவர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மீட்டு தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்..