fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கைத்தறி நெசவாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம்…! முதலமைச்சர் அறிவிப்பு

Chief Minister edapaddi palanisamy announcement for waivers

சென்னை:

நலவாரியத்தில் பதிவுசெய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில், கடந்த 24.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கின் காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் நிவாரண உதவித் தொகை உட்பட பொது விநியோகத் திட்டத்தின் மூலம், அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகிறது.

இதன் மூலம் பொது மக்களும், பல்வேறு தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 1,03,343 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி நெசவாளர்கள், தங்களுக்கும் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாமல் உள்ள நெசவாளர்களும் நெசவுப் பணியில் ஈடுபட்டு வருவதால், இவர்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் நெசவாளர்களுக்கும் இதர அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்றே நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத நெசவாளர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் நெசவாளர்களின் பட்டியல், விலையில்லா 200 யூனிட் மின்சாரம் பெற்று பயன்பெறும் நெசவாளர்களின் பட்டியலுடன் ஒத்திசைவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உதவியைப் பெற்ற பட்டியலில் விடுபட்டுள்ள நெசவாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஊரடங்கு கால நிவாரணத் தொகையான ரூ.2,000/- வழங்க கைத்தறித் துறை இயக்குநர் அவர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் வழங்குவார். அதன்படி, தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு விண்ணப்பம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close