கொரோனா மையமான சென்னை..! மூடப்பட்ட திருவான்மியூர் காய்கறி சந்தை…!
Thiruvanmiyur market closed
சென்னை: கொரோனா தொற்றால் சென்னை திருவான்மியூர் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னையில் தான் இப்போது கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஏப்ரல் 3வது வாரத்தில் 1200 கொரோனா நோயாளிகள் என்ற எண்ணிக்கை இப்போது 3000ஐ கடந்து அதிர்ச்சி தந்திருக்கிறது.
சென்னை அலைமோதும் மக்கள் கூட்டம் காரணமாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 266 என்று அறிவிக்கப்பட்டது. அதில் சென்னையில் உள்ளவர்கள் மட்டும் 196 பேர்.
இந் நிலையில் காய்கறி சந்தைகளே இப்போது கொரோனா பரவல் மையங்களாக கண்டறியப்பட்டு வருவதால் அவை மூடப்பட்டு வருகின்றன. தேனாம்பேட்டை காய்கறி மார்க்கெட்டை தொடர்ந்து இப்போது, பிரபலமான திருவான்மியூர் சந்தையும் மூடப்படுகிறது. அந்த சந்தை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: திருவான்மியூர் காய்கறி சந்தையில் ஒரு காய்கறி வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் இன்று முதல் காய்கறி சந்தை மூடப்பட்டு அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அங்கு உள்ள வியாபாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்பகுதியில் அமைக்கப்பட்ட சந்தை அங்கிருந்து வாகனம் நிறுத்தும் இடம், வடக்குமாட வீதி மற்றும் கிழக்கு மாட வீதி என மூன்று பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அப்பகுதியில் மேலும் சில இடங்களை கண்டறிந்து அங்கே சந்தை விரிவாக்கம் செய்யப்பட்டு மே 6 புதன்கிழமை முதல் அவை செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.