சாத்தான்குளம் விவகாரம்: மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஆணை!
MNM case against sathankulam issue
சென்னை:
மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்கான பதிவு செய்துள்ள சிபிசிஐடி இதுவரை 5 காவலர்களை கைது செய்துள்ளது.
இந்நிலையில் காவல்துறையினரால் பாதிக்கப்படும் மக்களின் வழக்குகளை உடனடியாக விசாரிக்கச் சரியான, நிலையான அமைப்பு வேண்டும் என்ற கருத்தை மக்கள் நீதி மய்யம் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்குப் போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது?
சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் காவல்துறை மக்கள் மீது செய்யும் அத்துமீறல்களை விசாரிக்க நிலையான அமைப்பை வேண்டி மக்கள் நீதி மய்யம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் நிர்வாகி மவுரியா இந்த வழக்கை தொடர்ந்தார்.
மேலும் மனுவில் ,போலீஸ் தாக்குதல், லாக்அப் மரணங்களை விசாரிக்க ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பதையும் குறிப்பிடப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகத்தில் காவல்துறை புகார் ஆணையம் அமைக்கப்படாதது பற்றி இரண்டு வாரங்களில் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.