கனமழையை எதிர்கொள்ள தயாராகவேண்டும்- பினராயி விஜயன்!
கனமழையை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் தயாராக வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மழை வெளுத்து வாங்கியது. மிகவும் முக்கிய நகரமான மும்பையில் கொட்டி தீர்த்த மழையால், நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதனை போலவே கேரளா மாநிலத்திலும் கன மழை பெய்து வருகின்றது.
இதன் விளைவாக கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெட்டிமுடி தேயிலை தோட்டத்தில் எஸ்டேட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு முழுவதும் மண் மூடியது. இதனால் சுமார் 80 பேருக்கு மேல் மண் சரிவில் சிக்கியுள்ளனர்.
அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல இயலாததால் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது சுமார் பத்து பேரை உயிருடன் மீட்டு மூணாறு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 17 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை அறிந்த பிரதமர் மோடி, அந்த நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகையையாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ” கனமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள், சுமார் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்தால் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு உள்ளிட்டவை ஏற்படும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.