
நெல்லை:
தென்காசி, நெல்லையில் ஒரேநாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 8 பேர் மும்பையில் இருந்து வந்தவர்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்று கடுமையான பாதிப்பை தந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மும்பையில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் போலீஸ் சோதனை சாவடியில் வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை நடக்கிறது. ராதாபுரம், பணகுடி அருகே பாம்பன்குளத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மானுார் மாவடியை சேர்ந்த ஒருவருக்கும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ராதாபுரம், பழவூரை சேர்ந்த இருவர், கூந்தன்குளத்தை சேர்ந்த 44 வயது ஆண், பார்பரம்மாள்புரத்தை சேர்ந்த 30 வயது ஆணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைகுறிச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதியானது. தென்காசி மாவட்டம் பொய்கையை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கும், பனவடலிசத்திரத்தை சேர்ந்த 43 வயது ஆணுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.















