டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் 1 கோடி மக்கள் போராட்டம்..
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்ற டிரம்ப் அமெரிக்காவை பாதுகாப்பேன் என்ற கொள்கையுடன் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதன்படி செலவின குறைப்பு நடவடிக்கையாக 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம், இறக்குமதி, ஏற்றுமதி வரி அதிகரிப்பு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வௌியேற்றுவது, மாணவர் விசாக்கள் ரத்து, பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி நிறுத்தம் போன்ற கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்டிரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்க மக்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து “சர்வாதிகாரத்துக்கு எதிராக ஜனநாயகத்தை காப்போம், மீண்டும் ஒரு சுதந்திர புரட்சியை உருவாக்குவோம்” என்ற முழக்கங்களுடன் அமெரிக்கா முழுவதும் நேற்று முன்தினம் முதல் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நியூயார்க், வாஷிங்டன் டிசி, டவுன்டவுன், சான்பிரான்சிஸ்கோ உள்பட 50க்கும் மேற்பட்ட மாகாணங்களில் நடந்த 400க்கும் மேற்பட்ட பேரணிகளில் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.அவர்கள் அமெரிக்க தேசிய கொடியையும் ஏந்தி, “சர்வாதிகாரத்துக்கு எதிராக ஜனநாயகத்தை காப்போம், மீண்டும் ஒரு சுதந்திர புரட்சியை உருவாக்குவோம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்று முழக்கமிட்டனர். அப்போது சிலர் டிரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தேசிய கொடியை தலைகீழாக பிடித்து சென்றனர். சீர்திருத்த நடவடிக்கை என்ற பெயரில் டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கர்களே எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.