தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக கொரோனாவின் தாக்கம் பூஜ்ஜியம்
The impact of Corona for the last 10 days in 7 districts of Tamil Nadu is zero
தமிழகத்தில் முதன்முதலாக கடந்த மார்ச் 7ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து, தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
இதைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட பல நடவடிக்கைகளின் படி தற்போது, கடந்த 10 நாட்களில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆக உள்ளது.
அதன்படி, நீலகிரியில் 16 நாட்கள், ராணிப்பேட்டையில் 14 நாட்கள், கன்னியாகுமரியில் 13 நாட்கள், ஈரோட்டில் 12 நாட்கள், வேலூர், கரூர், தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என சுகாதாரத் துறை கூறியுள்ளது.
இது சற்று ஆறுதல் தரும் தகவல் என்று கூறினாலும், தமிழகத்தின் தலைநகரம் என்றழைக்கப்படும் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் 2 மடங்கு அதிகமாகிக்கொண்டே வருகிறது.
இதற்குக் காரணம் பெரும்பாலானவர்கள் அரசின் கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றித் திரிவதே ஆகும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எதிர்வரும் காலத்தில் ஆவது, அரசின் கட்டுப்பாடுகளை மதித்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை விரட்டியடிக்க முடியும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.