அமராவதி உச்சி மாநாட்டில் முதல்வர் சந்திரபாபு பேச்சு..
ஆந்திராவை டிரோன் தலைநகராக மாற்ற 300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என அமராவதி டிரோன் உச்சி மாநாட்டில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், மங்களகிரியில் 2 நாட்கள் அமராவதி டிரோன் உச்சி மாநாடு – 2024 நேற்று தொடங்கியது. மாநாட்டை முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். பின்னர், முதல்வர் சந்திரபாபு நாயுடுபேசியதாவது:கடந்த 1990ம் ஆண்டுகளில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் ஆரம்ப நாட்களில்,நாட்டின் முதல் தகவல் தொழில்நுட்பத் திட்டமான ஹைடெக் சிட்டியை 1995ம் ஆண்டில் பொது-தனியார் கூட்டு (பிபிபி) மூலம் ஐதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தான் ஐதராபாத்தை தொழில்நுட்ப மையமாக மாற்றியது. டிரோன்கள் மூலம் நகரங்களில் போக்குவரத்து சிக்கல்களை தீர்க்கவும், விவசாய செயல்முறைகளை மேம்படுத்தவும், சுகாதாரத்தில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வரவும் முடியும்.டிரோன் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக ஆந்திராவை மாற்றும் திட்டமாக கர்னூல் மாவட்டம் ஓர்வகல்லுவில் டிரோன் மையத்தை உருவாக்க 300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும். அமராவதி இந்தியாவின் டிரோன் தலைநகராக மாறும். மேலும் ஆந்திரப் பிரதேசம் டிரோன் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும். ஆந்திராவில் 35,000 டிரோன் இயக்குபவர்களுக்கு (பைலட்டுகளுக்கு) பயிற்சி அளிக்கப்படும். மாநில அரசு விரிவான டிரோன் கொள்கையை வெளியிடும். இவ்வாறு முதல்வர் பேசினார்.