பொள்ளாச்சி பலாத்கார வழக்கு கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – போலீஸ் அறிவிப்பு
பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாக இருந்தான். தலைமறைவான அந்த திருநாவுக்கரசு ஏற்கனவே ஒரு ஆடியோவை வெளியிட்டிருந்தார் அதில் பல அரசியல் பிரமுகர்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தகவலை அடுத்து முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை கைது செய்ய கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும் , பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்ததால் அந்த வழக்கில் தொடர்புடைய சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதிஷ் (28), வசந்தகுமார் (27) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பேசுகையில் ;
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் , பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் எந்த அரசியல் கட்சியினருக்கும் சம்பந்தம் இல்லை என்றும் , தவறான உள்நோக்கத்துடன் செய்திகளை பரப்பினால் சட்டபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.
மேலும் இரண்டு ஆண்டுகளாக தற்கொலை செய்துகொண்ட பெண்களின் விவரங்களை எடுத்தும் விசாரிக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.