அரசு கல்லூரிகளில் ஒரே ஷிப்ட் முறை..! கல்லூரிக்கல்வி இயக்ககம் சுற்றறிக்கை!
One shift classes in all government colleges
சென்னை:
சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு அரசு கல்லூரிகளில் ஒரே ஷிப்ட் முறை என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2006-ம் ஆண்டுக்கு முன்பு வரை சுழற்சி முறை வகுப்புகள் கிடையாது. அதன்பிறகு, 2 ஷிப்டுகளின் அடிப்படையில் சுழற்சிமுறை வகுப்புகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.
இந் நிலையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய நடைமுறையையே கொண்டு வர உயர்கல்வித் துறை திட்டமிட்டு முடிவு செய்தது. அதன்படி, சமீபத்தில் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா அரசாணையாக வெளியிட்டு இருந்தார்.
அதில், ஷிப்ட்-1, ஷிப்ட்-2 என்ற சுழற்சி முறையிலான வகுப்புகளை ரத்து செய்து, ஒரே ஷிப்ட்ஆக கல்லூரிகளில் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை கல்லூரிகளில் வகுப்புகள் நடைபெறும். நாள் ஒன்றுக்கு 6 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு மணி நேரத்துக்கு ஒரு பாடவேளை என்ற வீதத்தில் 6 மணி நேரம் வகுப்புகளும், பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை உணவு இடைவேளையும் என உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அரசாணையை தவறாது பின்பற்ற வேண்டும் என்று கல்லூரிக்கல்வி இயக்ககத்தின் இயக்குனர் (முழு கூடுதல் பொறுப்பு) கே.விவேகானந்தன், அனைத்து மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி இருக்கிறார்.