தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை…! என்ன காரணம் தெரியுமா?
Chief minister edapaddi palanisamy warning to private hospitals
சென்னை:
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனி்சாமி எச்சரித்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் பல லட்சம் ரூபாய் வசூலிப்பதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனால் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது. ஆனாலும் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்து வந்தன.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிவெல் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க ரூ.12 லட்சத்துக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக ஒரு பெண் புகார் அளித்தார்.
இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டது. இதேபோல் சென்னை, சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையிலும் 25 நாள் சிகிச்சைக்கு ரூ.15 லட்சத்து 29 ஆயிரத்து 109 கட்டணம் வசூல் செய்த புகாரும் வெளியானது.
இதுபோன்று, சென்னை மற்றும் நகர் பகுதிகளில் பல தனியார் மருத்துவமனைகளில், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தையும் மீறி அதிக கட்டணம் வசூலிப்பதாக தமிழக அரசுக்கும், சுகாதார துறைக்கும், போலீசாருக்கும் தினசரி புகார்கள் வருகின்றன.
இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.